பிறையும் பிளவும் - II

Monday
கணிப்பீடானது தெளிவற்றது

இப்னு தைய்மிய்யா அவர்களின் கருத்தில் வானியல் கணிப்பீடானது தவறாக வழிகாட்டக்கூடிய தடுக்கப்பட்ட செயலாகும். அதன் புதிரான தன்மை அதன் நியாயத்தினைவிட வெளிப்படையானதாகும். இதனை ஆதாரப்படுத்த அவர்கள் நபி (ஸல்) அவர்களினுடைய பல்வேறு அறிவிப்புக்ககளை ஆதாரமாக காட்டுகின்றார்கள். (தகீக் அத்-தீன்,பகுதி.01,பக்.62) 

மேலும், அவர்கள் கூறுகையில் வானியல் கணிப்பீடு என்பது முற்றிலும் பொய்யானதும், ஏமாற்று வழியுமாகும் எனக் குறிப்பிடுகின்றார். 

'வானியல் சாஷ்திரத்தில் புகழ் பூத்த தலைவர்களுடன் நான் தர்க்க ரீதியான வாதங்களை கொண்டு அதன் பிழையான தன்மையினை நிரூபித்தேன். அவர்களில் ஒருவர் என்னிடம் கூறுகையில் ' கடவுளின் பெயரால், நாங்கள் ஒரு மெய்யுடன் பல்வேறு பொய்களை இட்டுக்கட்டினோம் எனக் கூறினார்.' (தகீக் அத்-தீன், பகுதி.01, பக். 62)

இந்நிலமைக்கு மாற்றமான கருத்துக்களும் அதன் மீதான தடைகளும் இஸ்லாத்தில் மிக அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளன. நபி (ஸல்) அவர்களினால் கூறப்பட்டதாக அல்- முஸ்லிமில் எடுத்துரைக்கப்படும் பின்வரும் ஹதீஸ் இதற்கு போதுமான சான்றாகும். 'யார் சாஷ்திரக்காரர்களை அணுகி மறைவான விடயங்களை பற்றி கேட்கின்றனரோ அவர்களின் நாற்பது நாட்கள் மேற்கொண்ட நற்செயல்கள் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.' இங்க ஹதீஸில் குறிப்பிடப்படுகின்ற 'அர்ரஅப் என்ற வார்தையானது மாயா ஜால வித்தைக்காரர்கள், மந்திரவாதிகள், சாஷ்திரக்காரர்கள் போன்றோரைக் குறிக்கின்றது. (தகீக் அத்-தீன், பகுதி.01,பக். 63)


பெரும்பான்மையினரது வாதத்தின் சுருக்கப்பொருள்

இஸ்லாமிய மாதத்தினை தீர்மானிப்பதில் மிகவும் வலிதான வழிமுறை கணிப்பீடாகும் என்பதற்கு மாற்றமான கருத்தினையே இவர்கள் கொண்டிருக்கின்றனர்.

1. இஸ்லாமிய மாதத்தினை ஆரம்பிப்பதிலும் அதற்கு பிரியாவிடை அளிப்பதிலும், விசேடமாக றமழான் மாதம், புலக்கண்ணால் பிறையினை காண்பதென்பது இஸ்லாமிய சட்டத்தினால் அவசியமாக்கப்பட்டதாகும். இத்தகைய முறையின் வாயிலாக மாத்திரமே அதன் நிச்சயத்தை (certainty) உறுதிசெய்து கொள்ளவியலும். இவ்வறிஞர்களின் கருத்தில் மெய்க்கண்ணால் பார்ப்பதுவே நோக்கம் அன்றி அவர்கள் அதனை ஒரு வழிமுறையாக கருத்திற்கொள்ளவில்லை. அவர்கள் புலக்கண்ணினால் காண்தல் அல்லது நோக்குதல் எனக்காட்டுவது எமது புலக்கண்களுக்கு தோன்றுவதனையே. மேலும் இவர்கள் குறிப்பிடுகையில், இஸ்லாமிய மாதத்தினை உறுதிப்படுத்துவது புலக்கண்ணினால் பார்ப்பதனூடாகவோ அல்லது நாட்களை 30ஆக பூர்த்தி செய்துகொள்வதன் ஊடாகவோதான் என்பதில் நவீன இஸ்லாமிய அறிஞர்களிடையே கருத்தொற்றுமை காணப்படுகின்றது என்கின்றனர். நபி (ஸல்) அவர்களினுடைய வார்த்தையில் காணப்படும் 'மேக மூட்டம் காணப்படுகின்றவிடத்து எண்ணிக்கொள்ளுங்கள் அல்லது கணக்கிட்டுக்கொள்ளுங்கள்' என்பது 30 நாட்களாக பூர்த்திசெய்தல் வேண்டும் என வலியுறுத்துகின்ற மற்றய அறிவிப்புக்களுடன் வைத்து விளங்கிக்கொள்ளப்படுதல் இன்றியமையாததது என்பது இவர்களுடைய கருத்தாகும்.

இதனை இமாம் இப்னுதைமிய்யா அவர்கள் விளக்குகையில்;

'கருத்தொருமைப்பாடு என்பது சட்டவியல் அறிஞர்கள் இஸ்லாமிய சட்ட விதிகளில் ஒன்றினை ஆர அரவணைத்து ஏற்றுக்கொள்கையில்தான் உருவாகின்றது. எந்தவொரு நபரும் அதனை மறுக்கவோ, அதனை எதிர்க்கவோ அனுமதியில்லை. ஏனெனில், இயல்பாகவே தவறாக காணப்படும் ஒன்றை சமூகம் ஏற்றுக்கொள்ளாது.' (தகீக் அத்-தீன், பகுதி. 20,பக்.20)


'உண்மை யாதெனில், எவர் ஒருவர் தீர்க்கமான உடன்பாடொன்றிற்கு எதிராக செயல்படுகின்றாரோ அவர் உண்மையில் நிராகரிக்கும் செயலை மேற்கொள்கின்றார். இந்நடவடிக்கை எவ்வாறானதெனில் தீர்க்கமாக காணப்படுகின்ற வேத வாக்கினை நிராகரிப்பது போன்றதாகும்.' (தகீக் அத்-தீன், பாகம்.20, பக்.10)


2. கணிப்பிடலானது வெறும் அதீத கற்பனையும்,மாய மந்திரங்களுமாகும். இவைகள் இஸ்லாமிய மாதத்தினை தீர்மானிப்பதற்கு எதுவித அதிகாரம் வாய்ந்த முறைகளையும் காட்டித்தர வல்லன அல்ல. இப்னு தைமிய்யா, அல் ஜஸ்ஸாஸ் போன்ற நவீன சட்டவியல் அறிஞர்களும் கூட இத்தகைய முறையினை நிராகரிப்பதில் கருத்தொருமித்து காணப்படுகின்றனர்.

3. இக்கணிப்பிடலானது சமூகத்தில் ஒரு சிலருக்கு மாத்திரம் தெரிந்த விடயமாக காணப்படுவதனால் மக்கள் மத்தியில் அது சிக்கல் தன்மையினை உண்டுபண்ணி விடுகின்றது என இமாம் நவாவி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

4. கணிப்பிடலுடன் தொடர்புபட்ட மற்றும் கிரக நிலைகளின் அசைவுகளையும், அதன் மறைந்து பிரகாசிக்கும் நிலைகளையும் வைத்துக் கொண்டு அதிஷ்டத்தினை எதிர்வு கூறுவதோ அல்லது முன்னறிவிப்பு செய்வதென்பதும் மாயா வித்தைக்காரர்களின் செயற்பாடாகும். இவை இஸ்லாமிய சட்டத்தில் கடுமையாக தடைசெய்யப்பட்டதொன்றாகும். இத்தகையவர்களுடன் அலி (றழி) அவர்கள் தோழமையாக பழகுவதனை கூட நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள் என அறியக்கிடைக்கின்றது. (அபூ தாவூத்)

5. அன்று மதீனாவில் வாழந்த யூத சமூகம் மாதத்தினை உறுதிசெய்துகொள்ள கணிப்பீட்டினை பயன்படுத்தியதனை அறிந்து வைத்திருந்த நபி(ஸல்) அவர்கள் அத்தகைய கணிப்பிடலை பயன்படுத்துவதனை தடைசெய்தார்கள். யூத வருட கலண்டரானது கி.மு 363ல் சு. ஹில்லல் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மதீனாவில் வாழ்ந்த யூத சமூகம் பின்பற்றி வந்தது. முஸ்லிம்கள் தமது மாதங்களை உறுதிசெய்துகொள்ள யூதர்களின் வழிமுறைகளை கைக்கொண்டு விடுவார்களோ என்ற நோக்கிலேயே நபி (ஸல்) அவர்கள் அதனை தடைசெய்தார்கள் என்றால் அது மிகையல்ல. அதுவே பெருமானாரினுடைய எண்ணமாகவும் இருந்தது.

6. மார்க்க விடயங்களில், அதாவது றமழான் மற்றும் ஷவ்வால் மாதங்களை துவங்குவதிலும், அதனை முடிவறுத்திக் கொள்வதிலும் கணிப்பிடலினை நாம் பிரயோகிப்போமானால் அது வணக்கத்தின் உயிரோட்டத்தில் இடரினை உருவாக்கிவிடும். அத்தோடு, 'நீங்கள் பிறையினை காணும் வரை நோன்பினை ஆரம்பிக்காதீர்கள், பிறையினை காணும் வரை நோன்பை முடித்தும் கொள்ளாதீர்கள்' என்ற நபி(ஸல்) அவர்களின் தெளிவான கட்டளைக்கு மாற்றம் செய்வதாக அமைந்துவிடும். இதனால் முஸ்லிம்களில் எவராவது ஒருவர்; இத்தகைய நபி (ஸல்) அவர்களின் அழுத்தம் திருத்தமான கட்டளைக்கு மாற்றமாக கணிப்பிடலை மையமாக கொண்டு நோன்பினை ஆரம்பிப்பாராக இருந்தால் அவை வெறும் அலங்கார நாட்களாகவே அமையும்.

7. புதிய பிறைக்கு அராபியில் ஹிலால் எனப்படுகின்றது. மொழி இலக்கணத்தில் ஹிலால் என்பது 'ஒளியின் பிரதிபலிப்பாகவும்', 'இருளாகவன்றி மின்னி பிரகாசிப்பதாயும்' அமைந்திருத்தல் அவசியம். மின்னி பிரகாசிப்பதென்பது மனிதனுடைய புலக்கண்களுடன் தொடர்புற்ற நிலையாகும். எனவே நாம் புதிய பிறையினை காணும்வரை எம்மால் பதிய மாதத்தினை ஆரம்பிக்கவியலாது. இவ்வாதமானது ஹிலால் என்ற சொல்லின் மொழி இலக்கணத்தின் அடியாக பிறந்ததாகும். 

இப்னு மன்சூர் அவர்கள் ஹிலால் என்ற செயல்லுக்கு பின்வரும் விளக்கத்தினை அளிக்கின்றார்கள்;

"அல்-ஹிலால் என்பது புதிய மாதம் ஆரம்பிக்கும் நிலையில் மக்களினால் அவதானிக்கப்படும் பதிய (வளரும்) சந்திரனின் வெள்ளை வெளீர் என்ற பிரகாசமாகும். மாதத்தினுடைய முதல் இரு இரவுகளில் தோன்றும் சந்திரனின் தோற்றம் ஹிலால் என அழைக்கப்படும். பின்பு அது 'கமர்' என அழைக்கப்படும். என்றாலும், மாதத்தின் முதல் மூன்று இரவு மட்டும் காணப்படுகின்ற சந்திரனை கூட ஹிலால் என அழைப்பதுமுண்டு. இன்னும், சந்திரனின் கால் பகுதி அளவான பகுதிவரையும் அதனை ஹிலால் என அழைப்பதுவுமுண்டு. மேலும், இருள் நீங்க, சந்திரனின் உன்னதமான அழகான பிரகாசம் நீண்டு ஜொலிக்கும் அளவு வரை அதனை ஹிலால் என அழைப்பதும் உண்டு. இந்நிலமை ஏழாவது இரவு வரை நிகழ முடியாது." (லிஸான் அல்- அரப்)

இஸ்லாமிய சந்திர மாதமானது புலக்கண்ணால் சந்திரனை காண்பது அல்லது மாத்தினை 30ஆக பூர்த்திசெய்வது அல்லாத வேறு வழிமுறைகளை கையாள்வதன் மூலமாக தீர்மானிக்கப்பட முடியாதது என்பது மேற்கூறிய சட்டவியல் அறிஞர்களின் கருத்துக்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடிகின்றது. இதுவே சாதாரணமாக அறியப்பட்டதும், உண்மைத் தன்மை வாயந்ததும் அதிகாரபூர்வமானதுமாகும். ஆனாலும் இவற்றுக்கு நடைமுறை ரீதியிலான விலக்கான சில சந்தர்ப்பங்களும் உள்ளன.

மேலாக, மேக மூட்டமாக இருக்கையில் ஷஅபான் மற்றும் றமழான் மாதத்தினை 30ஆக பூர்த்திசெய்து கொள்வது அல்லது அடிவானம் தெளிவில்லாத போது றமழானை ஷஅபான் மாதத்தின் 29ம் நாளில் ஆரம்பித்துவிடுவது என்பன நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துவிடுகின்றன. அதாவது, றமழானை சிலவேளை 28லும், இன்னும் சிலவேளை 31லும் முடிவறுத்திக்கொள்ள வாய்ப்பாய் அவை அமைந்துவிடுகின்றது.

இப்பிரச்சினை தொடர்பிலான பகுப்பாய்வினை Dr. ஷபாத் அஹமத் அவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள்;

தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் கருவிகளின் பயன்பாடு என்பனவற்றின் அடிப்படையில் ஊண்மையாக கணக்கிடுதல் என்பது நிச்சயதன்மையற்றது. அவை நேரத்திற்கு நேரம், இடத்திற்கு இடம் மாறுபாடுடையது. எவ்வாறாயினும் மக்கள் எல்லா நிலமைகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் ஒரளவு நிச்சயமானதும், இலகுவானதுமான விதியினை பிரயோகிக்க முயற்சிக்கிறார்கள். அதனை நிறைவேற்ற இலகுவான ஒரு வழிமுறை மாத நாட்களின் எண்ணிக்கையில் தெளிவில்லாத போது அதனை 29 அல்லது 30 என எடுத்துக்கொள்வதாகும். எனினும், அங்கு அதேதொகை நாட்கள் ஷஅபானுக்கும் றமழானுக்கும் பிரயோகமாகுமா எனும் வினா எழுகின்றது. அடிவானம் தெளிவில்லாத வேளை, இருமாதங்களும் அதே தொகை நாட்களை கருத்திலெடுக்க வேண்டுமா (29 அல்லது 30) அல்லது அவற்றில் ஒரு மாதத்தினுடைய நாட்களை 29 அல்லது 30ஆக எடுத்துக்கொள்வதா என்பது பின்வரும் நான்கு விடைகளில்தான் தங்கியுள்ளது.

அ) ஷஅபான் மாதத்தின் 29ம் நாள் தெளிவில்லாது இருக்குமானால் அம்மாதத்தினை 30 ஆக எடுத்துக்கொள்ளுவதுடன் றமழான் மாதத்திற்கும் இதே நிலமையினை பிரயோகித்தல்.

இதன்போது, நீங்கள் 30 நாட்களுக்கு மேலதிகமாக ஒரு போதும் நோன்பினை நோற்கமாட்டீர். சிலவேளை நீங்கள் 28 நாட்கள் மாத்திரம் நோன்பு நோற்க வேண்டியிருக்கும். ஆனால் ஒருவேளை ஷஅபான் மற்றும் றமழான் மாதங்கள் 29ஆக இருக்கின்றன. ஆனால் ஷஅபான் 29ல் மேக மூட்டமாகவும், றமழான் மாதத்தின் 29ம் நாள் தெளிவாகவும் இருக்கின்றன எனில், நீங்கள் ஷஅபானை 30 ஆக கணக்கிடுவதுடன், றமழான் மாதத்தின் ஒரு நாளை இழக்க நேரிடும். ஆனாலும், றமழான் 29ல் வானம் தெளிவாக இருக்குமானால் உங்களால் றமழான் பிறையினை (ஹிலால்) காணமுடியும். கரிபியன் தீவுகள், டிரினிடாட், கயானா முதலிய மேக மூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் இம்முறைமை 28ற்கு குறையாத நோன்பு நோற்றலை உறுதி செய்யும்.

ஆ) ஷஅபானின் 29ம் நாள் தெளிவில்லாது இருக்குமானால் அம்மாதத்தினை 29ஆக எடுத்துக்கொள்வதுடன் றமழான் மாதத்திற்கம் இதே நிலமையை கையாளல்.

இதன்போது, நீங்கள் ஒருபோதும் 29 நாட்களுக்கு குறைவாக நோன்பு நோற்கமாட்டீர்கள். ஆனால் சிலவேளை நீங்கள் 31 நாட்கள் அல்லது அதற்கு அதிகமாக நோன்பு நோற்க நேரிடுவதுடன், பெருநாளினையும் கொண்டாட நேரிடும். ஷஅபான் மாதத்தினை 29 நாட்களுக்கு மட்டுப்படுத்தியதன் காரணமாக, நீங்கள் ஷஅபானை 29 நாட்களாக எடுத்துக்கொள்வீர்கள். இருப்பினும் றமழான் 29ம் நாளில் வானம் தெளிவாக இருக்கும் போது நீங்கள் றமழான் இன்னும் நிறைவு பெற்றுவிடவில்லை என்பதனை அறிந்து கொள்வீர்கள். எனவே, நீங்கள் றமமழான் 30 நாட்கள் நோன்பு நோற்பதுடன், ஷஅபானின் ஒரு நாளிலும நோன்பு நோற்றிருப்பீர்கள். இன்னும் றமழானுக்கு முந்திய பல மாதங்களில் மேக மூட்டம் அவதானிக்கப்படுமாக இருந்தால் நீங்கள் 31 நாட்களைவ விட கூடுதலாக நோன்பினை நோற்க வேண்டியிருக்கும்.

இ) ஷஅபானின் 29ம் நாளில் வானம் தெளிவற்று காணப்படுமானால் அம்மாதத்தினை 29ஆக எடுத்துக்கொள்ளுங்கள ஆனால் றமழான் மாதம் 29ம் நாளில் வானம் தெளிவில்லை எனில் அம்மாதத்தினை 30ஆக எடுத்துக்கொள்ளுங்கள்.

இதன்போது, நீங்கள் 29 நாட்களுக்கு குறைவாக ஒருபோதும் நோன்பு நோற்க மாட்டீர்கள். எனிலும், சிலவேளை நீங்கள் 31 நாட்கள் நோன்பு நோற்க வேண்டியிருக்கும்.

இன்று நாம் எல்லோரும் வலியுறுத்துவது (அ) வில் குறிப்பிடப்படும் நிலமையினையாகும். அதாவது; வானம் தெளிவில்லா வேளை அம்மாதத்தினை 30ஆக பூர்த்திசெய்வதாகும். ஏவ்வாறாயினும், எமது வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டக் கூடிய விடயம் யாதெனில் மேற்கூறப்பட்ட அனைத்து வகையும் முஸ்லிம்களினால் இன்று பின்பற்றப்படுவதாகும். மறுபறம், றமழானை ஆரம்பிப்பதும் அதனை முடிவுறுத்திக்கொள்வதும் பல்வேறு ஹதீஸ்களினை ஆதாரம் காட்டி மேற் கூறியவாறே பொருள்கோடல் மேற்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது.

மேலும், இங்கு புலக்கண்ணால் காண்பது என்றால் எவ்வாறு? அதன் முறைமை என்ன? என்பன முதலிய வினவுதலுக்கு எந்தவித சந்தர்ப்பமும் கிடையாது. ஏனெனில் நேரடியாக புலக்கண்ணால் சந்திரனை அவதானிப்பதே சட்டவியல் அறிஞர்களினால் கருத்தொருமிக்கப்பட்ட விடயம் என்பதுடன் அதுவே இஸ்லாமிய மாதத்தினை நிச்சயப்படுத்திக்கொள்ளவுமான அதிகாரம் வாய்ந்த முறையாகும். இந்த விடயத்தில் இஸ்லாமிய சட்டவியல் அறிஞர்கள் மத்தியில் பாரியளவு வேறுபாட்டினை நாம் அவதானிக்க முடிகின்றது. ஆகவே, புலக்கண்ணால் சந்திரனை பார்த்தல் என்பது எதுவித நிபந்தனையுமின்றி, கருத்து வேறுபாடுகளின்றிய இஸ்லாமிய விதி எனக்கொள்ள முடியாது. அது ஷரிஆவில் 'ஸன்னி' அல்லது ஊகிக்கப்பட்ட விடயம் அன்றி நிபந்தனைகள் எதுவுமற்ற 'கத்இ' என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படமாட்டாது.
 

Browse